வாழ்வியல் சினிமா?
"மேற்குத்தொடர்ச்சி மலை" திரைப்படம் பார்த்தேன். படம் இத்தனை அற்புதமாக வந்ததற்கு, இயக்குனர் லெனின் பாரதி அந்த நிலத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பதே முக்கியக் காரணமாக இருக்க முடியும். இல்லாவிட்டால் கடலோர கவிதைகள் திரைப்படத்தில், அலையடிக்கும் இடத்தில் குதித்து ஒரு வஞ்சிரம் மீனைத் தூக்கியபடி சத்யராஜ் எழும்புவதுபோல் இருந்திருக்கும்.
அதைவிடக் கொடுமை என்னவென்றால், நெய்தல் நிலத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட பல அபத்தமான திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன என்பதுதான்.
படத்தின் வெற்றிதோல்விக்கு அப்பாற்பட்டு, மீனவர்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்கிற மிகமோசமான எண்ணத்தை இதர மக்களுக்கு ஊட்டி வளர்த்தவர்கள் நம் தமிழ் இயக்குனர்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.
தமிழ் சினிமாவில் நம்மை மிகவும் தவறாக சித்தரிக்கிறார்களே என்று அடிக்கடி நாங்கள் கவலைப்பட்டுக் கொண்டிருப்போம். அதை நீங்கள் புரிந்துகொள்வது கடினம். ஒரு மனிதனின் அடையாளத்தை அளிப்பதைவிடக் கொடுமையானது தவறாக அடையாளப்படுத்தப்படுவது. கடற்கரையில் அமர்ந்துகொண்டு எல்லோரும் பார்க்கும்படி நாங்கள் மது அருந்தினால் வீட்டில் இடம் கிடைக்காது. தகப்பனார்கள் பார்த்தால் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது. ஆனால் நீர்ப்பறவை விஷ்ணுவும், மரியான் தனுஷும் அதை தினமும் செய்வார்கள்.
பாறைகளின் நடுவே ரொமான்ஸ் செய்வதும், கடற்கரையில் காதலியுடன் ஓடிப்பிடித்து விளையாடுவதும் இன்னும் நூறு ஆண்டுகள் கடந்தாலும் அங்கே நடக்காத காரியம். என் பெற்றோர் காதல் திருமணம் புரிந்தவர்கள். கடற்கரையில் அவர்கள் சேர்ந்தார்போல் நடந்துசென்று இதுவரை நான் பார்த்தது கிடையாது.
மீன் வியாபாரம் செய்யும் வயதான பெண்களைத் தவிர்த்து வேறு எந்த பெண்களும் கடற்கரைக்கே வருவதில்லை. ஆலயத்திருவிழாக்களின்போது கடற்கரையில் மேடை அமைத்து நடத்தப்படும் கலைநிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கு மட்டுமே குடும்பத்துடன் பெண்கள் வருவார்கள். கடற்கரையைக் காண்பதற்கு அதுதான் வாய்ப்பு அவர்களுக்கு. ஆனால் "சோனாப்பரியா.. சோனாப்பரியா" என்று தனுஷும் பார்வதியும் கடற்கரையில் நடனமாடுவார்கள். கார்த்திக், ராதாவை துரத்திக்கொண்டு ஓடுவார். ரேகா, சத்யராஜுக்கு கடற்கரையில் அமர்ந்து பாடம் நடத்துவார்.
"முட்டம்" என்கிற ஊரை, படாதபாடு படுத்தியதில் பாரதிராஜாவுக்கு அதிக பங்குண்டு. ஆனால் நிஜத்தில், அந்த ஊருக்குச் சென்று ஒரு சின்னப்பத்தாஸை நீங்கள் கண்டுபிடிக்க முடியாது. எங்கள் மாவட்டத்துக்கும் சங்கீத வகுப்புகளுக்கும் இன்றுவரை சம்மந்தம் கிடையாது. ஆனால் கார்த்திக்கின் வீட்டில் எண்பதுகளிலேயே ராதா சங்கீதம் கற்கச்சென்றது எப்படியோ?!!
தவறாக, ஏதோ ஒரு தமிழ் பேசுவது, ஆழ்கடலுக்குள் குதித்து ஈட்டீயால் குத்தி மீன்பிடிப்பது என்று மொழியையும், தொழிலையும், வாழ்வியலையும் தவறாகக் காட்டி சம்பாதித்ததோடு, மீனவர்கள் குறித்த மிகத்தவறான பிம்பத்தையும் உருவாக்கிச் சென்றிருக்கிறார்கள் நம் இயக்குனர் இமயங்கள்.
எல்லா மக்களின் வாழ்வியலும் இங்கே திரைப்படமாக உருவாக்கப்பட வேண்டியது அவசியம். ஆனால் அது சரியாக காட்டப்பட வேண்டுமே?!!
அதற்கு பெரிய மெனக்கெடலும், முன்தயாரிப்பும் வேண்டும். அதை லெனின் பாரதியிடம் பிற இயக்குனர்கள் கற்றுக்கொள்ளுங்கள். அடிப்படை தேடல்கூட இல்லாமல் படம் எடுக்க மனசாட்சி எப்படி இடம் கொடுக்கிறது?!! ஒரு கலைஞனுக்கு சாமானியனைவிட கூடுதல் சமூகப்பொறுப்பு வேண்டுமல்லவா?! நான் நியாயமாகக் கேட்கிறேன். என்னைவிட நல்ல தமிழ் தெரிந்தவர் யாரேனும் வந்து அசிங்கமாகக் கேட்கும் முன்னர் தேடலைத் தொடங்குங்கள்.
வெறுமனே ஒரு காதல் கதையைத் தூக்கிக்கொண்டு கடற்கரையை நோக்கி ஓடி வராதீர்கள்! கழுத்தில் கல்லைக்கட்டி கடலுக்குள் தூக்கி வீசிவிடுவோம்!!
விஷன்.வி