96 - எதற்கு ஆராய்ச்சி?

ஒரு திரைப்படத்தை இத்தனை ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டாம் என்று நினைக்கிறேன்.

ராம் வாழத்தெரியாதவன் என்கிறார்கள். இப்படியெல்லாம் கன்னித்தன்மை கழியாமல் வாழவேண்டிய அவசியமென்ன என்று கேட்கிறார்கள்..
வழக்கம்போல நம் பெண்ணியவாதிகள்,  ஒருவித தீவிரக்காதலை ஜானுவின் மீது செலுத்தி அவளை மனதளவில் இவனுக்கு அடிமையாக்க முயற்சிக்கிறான் என்கிறார்கள்.
இன்னொரு கூட்டம் ஜானுவின் சாதியை ஆராய்ந்து அவள் பார்ப்பன  பெண்ணாகத்தான் இருக்க வேண்டும். மறைமுகமாக பார்ப்பனியத்தை படத்தில் திணித்திருக்கிறார்கள் என்கிறது.
ஆண்பெண் உறவை புனிதப்படுத்தி மீண்டும் நம் சமூகத்தை பின்னோக்கி இழுக்க முயற்சித்திருக்கிறார்கள் எனக் கூவுகிறது போராளிக்கூட்டம்.

இதையெல்லாம் பார்க்கும்போது தலைவன் கவுண்டமணி, செந்திலிடம் கேட்பது போல் "இப்டியெல்லாம் பேசச்சொல்லி எவன்டா உனக்கு சொல்லித் தர்றான்" என்று கேட்கத் தோன்றுகிறது.

நம் முதல் காதலை எப்போதும் மறக்கமுடியாது என்கிறோம் நாம். ஆனால் வாழ்நாள் முழுக்க அந்த முதல்காதலையே ஒருவன் நினைத்துக்கொண்டிருந்தால் என்னாகும் என்று 96 படத்தின் இயக்குனருக்கு தோன்றியிருக்கலாம். அதை அவர் கதையாக எழுதியிருக்கிறார். அந்தக்கதையை படமாக எடுத்திருக்கிறார்.
தொலைந்த அல்லது தொலைத்த நமது காதலையெல்லாம் நம் நினைவுக்குக் கொண்டுவர முயற்சித்திருக்கிறார். அதில் வெற்றிபெற்றிருக்கிறார். ஜானுவுக்கு திருமணம் முடிந்திருக்க வேண்டும். 22 வருடங்களுக்குப் பிறகு இருவரும் மீண்டும் சந்திக்க வேண்டும். அப்போதுவரை, ராம் வேறுயாரையும் காதலிக்காமல், குறிப்பாக கன்னித்தன்மை கழியாமல் இருக்க வேண்டும் என்று அவர் முடிவு செய்திருக்கிறார். இதில் சேதுவும் த்ரிஷாவும் நடிக்க வேண்டுமென்றும் அவர்தான் விரும்பியிருக்கிறார்.
பசங்க 2 திரைப்படத்தில் "இது என்னோட கதை மிஸ். இதுல யாரு என்ன பண்ணணும்னு நான்தான் முடிவு பண்ணுவேன்" என்று ஒரு குழந்தை சொல்லுமே ஞாபகமிருக்கிறதா?!!
அதேபோல் இது இயக்குனரின் கதை. இதில் யார் என்ன செய்ய வேண்டுமென்று அவர்தான் முடிவு செய்வார். நாம் விரும்பினால் பார்க்கலாம். படம் பிடிக்கவில்லை என்றால் விமர்சனம் செய்யலாம். ஆனால் விமர்சனம் என்கிற பெயரில்,  நீங்களாக ஒன்றை அபத்தமாக அனுமானித்துக்கொண்டு, உங்கள் புத்திசாலித்தனத்தைக் காட்டும் முயற்சியில் நான் மேலே சொன்னபடியெல்லாம் யோசித்து எழுதுவது பெரும் அபத்தம்.

பிரான்சில் உலகத்தரமான திரைப்படங்கள் வந்ததன் பின்னணி தெரியுமா?!! 
இப்படி விமர்சிக்கிறீர்களே,,, உங்களால் ஒரு நல்ல திரைப்படம் எடுக்க முடியுமா என்று அங்கிருந்த இயக்குனர்கள் கேட்டதும், அந்த விமர்சகர்கள் களமிறங்கி எடுத்த திரைப்படங்கள்தான்  உலக சினிமா அரங்கில் பிரெஞ்சு திரைப்படங்களுக்கு தனிமரியாதையை உருவாக்கித்தந்தது.
முகநூல் விமர்சகர்களே!! இப்படியொரு கேள்வியை நம் இயக்குனர்கள் உங்களைப் பார்த்துக்கேட்டால் என்ன செய்வீர்கள்?!! மூடிக்கொண்டு இருக்கவேண்டி வருமல்லவா?!!
அதனால படத்தை ரொம்ப ஆராயாதீங்க... நீங்க அறிவாளிங்கதான்னு நாங்க ஒத்துக்குறோம்!! முடிஞ்சா கொஞ்சம் அனுபவிங்க!!
நீங்கள் அனுபவிக்கவில்லை என்றாலும் குறையொன்றுமில்லை. படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

விஷன்.வி

No comments:

Post a Comment