இளையராஜாவின் பாடல்களா இல்லை?!

கேட்பதற்கு
இளையராஜாவின்
பாடல்களா இல்லை?!
ஏன் மரித்துப் போகிறீர்கள்!?

நான் ஒருபோதும் மனிதர்களிடம்
தஞ்சம் புகுந்ததில்லை
முன்வரும் தேற்றுதலில் மகிழும் மனம்
பின்வரும் நிராகரிப்பை ஏற்காது
இசையில் தஞ்சமடைந்து விடுகிறேன்

கொடுமையான
இரவுகள் உயிரைப்பறித்து விடும்
தாமதிக்காமல் கொஞ்சம்
இசை கேட்டுவிடுகிறேன்

உறவுகள் ஒருபோதும் உயிரை காக்காது
காவுவாங்கவே காத்திருக்கும்
எப்பொழுதும் ஒதுங்கியே நிற்கிறேன்
முப்பொழுதும் இசை கேட்கிறேன்

காதல் நட்பு பாசம் காமம்
என்ன வேண்டுமானாலும்
பெயர் வைத்துக் கொள்ளுங்கள்
எழுதித்தருகிறேன் உத்தரவாதமில்லை
வாழ்வதற்கான மந்திரவாதம்
இசையில் உண்டு
தினமும் கேட்கிறேன்

உயிர் துறப்போர் கோழைகளில்லை உச்சகட்ட துணிச்சல் அது 
ஆனாலும் உச்சம் தொடுதல் ஆபத்தானது
உச்சங்கள் மறுநொடியில்
கீழே தள்ளிவிடுகிறது
இசையின் உச்சத்தைத் தவிர
நான் இசையில் மட்டுமே உச்சம் தொடுகிறேன்

ஒருபோதும் மனிதரிடத்தில்
ஆறுதல் தேடாதீர்கள்
மரித்துப்போவீர்கள்
ஆறுதல் தேடும் நேரத்தில் 
இசை கேட்டால் வாழ்ந்து விடுவீர்கள்
நான் இன்னும் மரிக்காமல்
வாழ்கிறேன் என்பதே
அதற்கான சாட்சி

எல்லா உணர்வுகளுக்கும்
இசை இங்குண்டு
மரிக்கத்தூண்டும்
உள்ளுணர்வுக்கும் உண்டு
இசையில் இத்தனை இருந்தும்
ஏன் மரித்துப் போகிறீர்கள்!?
கேட்பதற்கு
இளையராஜாவின்
பாடல்களா இல்லை?!!

விஷன்.வி

No comments:

Post a Comment