உலகின் மிகச்சிறந்த காதலி

உலகின் மிகச்சிறந்த காதலி யாரென்று கேட்டால் வேறு யாரைச்சொல்வேன்?!காதலனின் கால்களை
நறுமணத்தைலத்தால் கழுவி
அவள்தன் கூந்தலால் துடைத்தது பெண்ணடிமைத்தனம் அல்ல.
பேரன்பு அது!
போராளியை இறுதிவரை பின்தொடர்வது சுடுவெப்பம் மனதைத் துளைப்பதைப் போன்றது.
அதைத் தாங்கிக்கொண்டு
அன்பை மட்டுமே அவனுக்களித்தது அதிசயக்காதலின் வெளிப்பாடு.
உயிருக்கு நெருக்கமானவன் வினைசூழ்ந்து சிலுவையில் அறையப்படும்போதும் பயந்துருகி விலகிச்செல்லாமல் உடன் பயணிக்க அவள் பெருங்காதல் கொண்டிருக்க வேண்டும்.
தன்னவன் உயிர் துறந்ததும் அழுதுதீர்த்து பின் மறந்துபோகாமல் அவனை உயிர்ப்பித்து கடவுளாக்க அவள்பட்ட பெரும்பாட்டை எழுத தனி விவிலியம் தேவைப்படும்.
எல்லாம் நிறைவேறி,
இறுதியில் அவனைக் கடவுளாக்க,
அவள் விபச்சாரியாக்கப்பட்டாள்.
அவளின் மொத்தக்காதலும் சுத்தமாய்  மறைந்துபோனது வரலாற்றுப்பிழை.
அந்தப் பேரழகியின் அத்துணை பேரன்பில் ஒற்றைத்துளியேனும் இங்கே தெளிக்கப்பட்டிருக்கலாம்தான்.
மார்க்ஸின், ஜென்னிக்கு கிடைத்தப் புகழேனும் அவளுக்கு கிடைத்திருக்க வேண்டும்தான்.
உலகின் எல்லா சிறந்த காதலர்களுக்கும்
நேர்கிற பெருஞ்சோகத்தில் ஒன்றாய் இதனையும் கடந்துவிட முயற்சிக்கிறேன்
இரவுதோறும் என் தலைமாட்டில் கேட்கும் அழுகைச்சத்தத்தால் அது முடியாமல்போக அவளுடன் சேர்ந்து நானும் அழுகிறேன்.
உலகின் மிகச்சிறந்த காதலி யாரென்று கேட்டால் அவளையன்றி வேறு யாரைச்சொல்வேன்?!

விஷன்.வி

No comments:

Post a Comment