நானும் மணற்துகளும்

இப்பெருநகரத்தின்
ஒவ்வொரு சாலையும்
ஒவ்வொரு தெருவும்
அத்தெருக்களின் ஒவ்வொரு வளைவும்
உன்னை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கின்றன
உன்னோடு பயணித்த
நினைவுகளை சாலைகளும்
உன்னோடு நடந்துசென்ற
நினைவுகளை தெருக்களும்
உன் கைகளைப் பற்றிக்கொண்டு கதைத்துநின்ற நினைவுகளை தெருவளைவுகளும்...

சாகடிக்கும் நினைவுகளின் சல்லியத்திலிருந்து தப்பிக்க நினைத்தேன்
என்னை உறங்கவைத்து
என் நினைவுகளை மொத்தமாக
நானே களவாடி
பூக்கள் நிறைந்திருந்த
பை ஒன்றில் நிறைத்து
வங்கக்கடலில் வீசிவிட்டு
வந்து படுக்கையில் விழுந்தேன்

யாரோ புன்னகைக்கிற சத்தம்
அதே கடற்கரையில் நம் ஆழமுத்தத்தை முன்பொருமுறை அண்ணாந்து பார்த்து இலயித்திருந்த மணற்துகள் ஒன்று
என் கால் விரலிடுக்கில் அமர்ந்தபடி எனைப்பார்த்து சிரித்தது
என்னவென்று கேட்டேன்
எங்கே உன் காதலி என்றது

மீண்டும் உன் மொத்த நினைவுகளும் வரிசைகட்டி நினைவுக்கு வரவே,
இனி வாழ்வதற்கு வழியில்லை   என்பதறிந்து மாண்டுவிட
வழி தேடுகிறேன்.
என் கால்களைப் பற்றியபடி அம்மணற்துகளும் அதையே தேடுகிறது.

விஷன்.வி

மலையாள நடிகர்களை எப்படி தேர்வு செய்கிறார்கள்?!



"தமாஷா" திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, கேரளாவில் இருக்கும் இயக்குனர்கள் தங்களின் கதாபாத்திரத்துக்காக எப்படிப்பட்ட நடிகர்களை தேர்வு செய்கிறார்கள் என்பது குறித்து வியக்காமல் இருக்க முடியவில்லை.

பாலசந்தர், நாகேஷ் கூட்டணியில் வந்த திரைப்படங்களைத் தவிர்த்துவிட்டு பார்த்தால், தமிழில் சப்பாணியாக நடிப்பதற்கும், கண் பார்வையற்றவராக நடிப்பதற்கும், மனநலம் குன்றியவராக நடிப்பதற்கும், நன்றாக நடிக்கத் தெரிந்த ஒரு கதாநாயகனே தேவைப்படுகிறார். அவர் அழகானவராக இருந்தால் இதுபோல் பாத்திரங்களுக்காக கஷ்டப்பட்டு அவரது அழகையும் குறைக்க வேண்டியிருக்கிறது. உதாரணத்திற்கு பதினாறு வயதினிலே, காசி, குணா போன்ற படங்களைச் சொல்லலாம்.

ஆனால் மலையாளத்தில் வேறொன்றைச் செய்கிறார்கள். அவர்களின் கதாபாத்திரத்துக்கு பொருத்தமான கதாநாயகர்களை தேடுவதற்குப் பதிலாக நடிகர்களைத் தேடுகிறார்கள். அவர் நகைச்சுவை நடிகரா, வில்லனா, சிறிய கதாபாத்திரங்கள் செய்கிற நடிகரா என்றெல்லாம் பார்ப்பதில்லை. பொருந்திவரும் பட்சத்தில் அவர்களையே கதாநாயகனாக நடிக்க வைக்கிறார்கள்.

சரி. அதனாலென்ன என்று கேட்கிறீர்களா?!

அதனால் என்னவென்றால் கலாபவன் மணி, சலீம், சுராஜ் வெஞ்சிரமூடு, செளபின், விநாயகன் போன்ற மிகச்சிறந்த நடிகர்கள் அங்கே உருவாகிறார்கள். அந்த வரிசையில் நாம் பிரேமம் படத்தில் பார்த்த 'வினய் ஃபோர்ட்' இந்த தமாஷா படத்தின் மூலமாக அற்புதமான நடிகராக, கதாநாயகனாக மாறியிருக்கிறார். இதனால் ஒரு கதாநாயகனுக்காக காலமெல்லாம் காத்திருக்க வேண்டிய அவசியம் அங்குள்ள படைப்பாளிகளுக்கு இல்லாமல் போகிறது. ரசிகர்களுக்கும் புதிதான அனுபவங்கள் கிடைக்கிறது. நாம் சாலையில் காண்கிற சாதாரண மனிதர்களின் கதைகள்கூட திரைப்படமாகிறது.

இதில் நான் சொன்ன கலாபவன் மணி, சலீம், சுராஜ் வெஞ்சிரமூடு, செளபின் ஆகிய நால்வரும் நகைச்சுவை நடிகர்களாக இருந்தவர்கள். விநாயகனும்தான். பின்னாளில் தேசிய விருதுகள் உட்பட பல விருதுகளை வாங்கிக் குவித்தார்கள். செளபின் தற்போது படத்துக்குப் படம் காட்டிக் கொண்டிருக்கிற அபிநயத்தை எந்த வகையறாவில் சேர்ப்பதென்றே தெரியவில்லை. கடைசியாக வைரஸ் திரைப்படத்திலும் மாயமொன்றை நிகழ்த்தியிருந்தார். அவரது கும்பளாங்கி நைட்ஸ் பற்றியும், சுடானி From நைஜீரியா பற்றியும் எழுதுவதற்கு நூறு பக்கங்கள் தேவைப்படும். "கம்மட்டிப்பாடம்" விநாயகனை காலத்துக்கும் மறக்க முடியாது. இயக்குனர் வினயனுக்கு ஒரு ஏழை குருடனாக நடிப்பதற்கு அதுவரை அங்கே நகைச்சுவை நடிகராக இருந்த கலாபவன் மணி போதுமானவராக இருந்தார். ஆனால் இங்கே அவருக்கு விக்ரம் தேவைப்பட்டார். கலாபவன் மணி செய்த பாத்திரங்களை என்னால் செய்ய முடியாது என்று மம்மூட்டி ஒரு மேடையில் சொன்னார் என்பதையும் இங்கே நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது.

இதில் முக்கியமாக இரண்டு விஷயங்களை கவனிக்க வேண்டும். முதலாவது நமது படைப்பாளிகள் இதுபோல் ரிஸ்க்கெல்லாம் எடுக்க விரும்புவதில்லை. இரண்டாவது நாமும் அத்தனை எளிதாக எல்லோரையும் கதாநாயகனாக ஏற்றுக்கொள்வதில்லை. நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமானால் அப்படம் ஒரு பெரிய இயக்குனரால் எடுக்கப்பட வேண்டும். குற்றம் சொல்வதற்கில்லை. திரையரங்கம் செல்வதற்கு நமக்கு மினிமம் கியாரண்டியாக யாரேனும் தேவைப்படுவது ஒன்றும் தவறல்ல. ஆனால் நம் பெரிய இயக்குனர்கள், பெரிய கதாநாயகர்களோடு ஐக்கியமாகி விடுகிறார்கள் என்றே தோன்றுகிறது.

ஒன்றிரண்டு பேர் இங்கேயும் மலையாள இயக்குனர்களைப்போல செய்ய முன் வந்தார்கள். "சொல்லாமலே" திரைப்படத்தில் லிவிங்ஸ்டனை நாயகனாக்கிய இயக்குனர் சசியைப்போல. அந்த வகையில் "எட்டு தோட்டாக்கள்" தமிழில் ஆச்சரியமான படைப்புதான். மேலும் ஆச்சரியங்களை நிகழ்த்த இங்கே இளம் படைப்பாளிகள் வந்தே ஆக வேண்டும் என்று நினைக்கிறேன். காலமும், கலையும் இரு கரங்களை விரித்தபடி உங்களை வரவேற்க காத்திருப்பதாகவே உணர்கிறேன். ரசிகர்களும்தான்!

மலையாளத்தில் இனி வினய் ஃபோர்ட் நிகழ்த்தவிருக்கும் ஜாலங்களைக் காண உங்களைப் போலவே நானும் காத்திருக்கிறேன்.

விஷன்.வி

முதல் அதிகாரம் - 2

18000 வருடங்களுக்கு முன்பிருந்த கன்னியாகுமரிக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்து, காலஇயந்திரத்தில் ஏறி, வருடம், நாள், நேரம், இடம் என அத்தனையும் டைப் செய்துவிட்டு, அடுத்த ஆறாவது நொடியில் என்ன நடக்குமோ என்கிற ஆச்சரியத்திலும், பயத்திலும் கண்களை மூடிக்கொண்டேன்.

1.. 2.. 3.. 4.. 5..

ஐந்து நொடிகள் கடந்து விட்டன. இப்போது  நான் 18000 வருடங்களுக்கு முன்பு சென்றிருக்க வேண்டும். இத்தனை வருடங்கள் முன்பு செல்வதில் தயக்கம் எதுவும் இல்லை. ஆனால் ஏற்கனவே நடுக்கடலில் மாட்டிக்கொண்டோம். இம்முறை எந்த இடத்தில் சென்று மாட்டிக்கொள்ளப்போகிறோமோ என்ற பயம் மட்டும் இருந்தது. இம்முறை கடலில் மூழ்கும் உணர்வு எதுவும் இல்லை. உண்மையாகவே 18000 வருடங்களுக்கு முன்பு வந்துவிட்டோமா அல்லது இன்னும் சென்னையில்தான் இருக்கிறோமா?? கண்களைத் திறக்காமலேயே யோசித்தேன். கண்டிப்பாக சென்னை இல்லை. மலர்களின் வாசமும், மழைவிழுந்த ஈரமண்ணின் வாசமும் ஒருசேர வீசுவதை என்னால் நுகரமுடிகிறது. மிதவேகத்தில் அடிக்கிறக் காற்று, வாசனையோடு என்னைக் கடப்பதை கண்களைத் திறக்காமலேயே உணர்கிறேன். இது சென்னையில் நிகழ சாத்தியமில்லை.

திரைப்படங்களில் வெற்றிகரமாக கண் அறுவைசிகிச்சை செய்யப்பட்டபின், கண்களில் கட்டியிருக்கும் வெள்ளைத்துணியை பூப்போல மருத்துவர் அவிழ்த்ததும், மொட்டு மலர்வதைவிட  மென்மையாக கண்களைத் திறக்கும் கதாநாயகியைப்போல, என் கண்களைத் திறந்தேன். வெகுநேரம் தியானத்தில் இருந்துவிட்டு கண்களைத் திறக்கும் புத்தபிக்குவைப்போல என்றும் இதனைச் சொல்லலாம்.

உண்மைதான். நான் சென்னையில் இல்லை. தார்ச்சாலைக்குப் பதிலாக, மிக இறுக்கமாக போடப்பட்ட நீளமான செம்மண் சாலை. அப்போதுதான் லேசான மழைபொழிந்து நின்றிருக்கிறது என்பதை அந்த செம்மண்ணின் ஈரமும், வாசமும் சொல்கிறது. சாலையின் இரு ஓரங்களிலும் சீரான இடைவெளிவிட்டு வளர்ந்து நிற்கிற மிகப்பெரிய மரங்கள். பார்ப்பதற்கு அவை, நம்மூர் கிராமங்களில் நிற்கும் அரசமரங்களைப்போல இருக்கிறது. நீள்வட்டத்தில் இருக்கும் ஆரஞ்சுநிற இலைகள் அந்த மரத்தின் அழகையும், சாலையின் அழகையும் கூடுதல் அழகாக்குகிறது. சாலையின் இரண்டு பக்கங்களும், மிகப்பெரிய மணற்பரப்பும், ஆங்காங்கே மரங்களுமாக பரந்துவிரிந்திருந்திருக்கிற நிலம், அடர்த்தி குறைந்த வனம்போல காட்சியளித்தது. எனக்கு நேர்எதிரே நிற்கும் ஒரு மரத்தின் கிளையில் அமர்ந்திருந்த குயிலைப்போன்ற  ஒரு பறவை, என்னையேப் பார்த்துக்கொண்டிருந்தது. அதன் அலகு மட்டும் கிளியின் அலகைப்போல சிவந்த நிறத்தில் இருக்கிறது. சட்டென்று தன் அலகைத்திறந்து ஏதோசொல்லிவிட்டு உயரமாகப் பறந்தது. யாருக்கு சேதிசொல்ல பறக்கிறது என்று  தெரியவில்லை. இப்போது நான் ஆளரவமற்ற மதியநேரத்து தேசியநெடுஞ்சாலையில் தனியே நிற்பதுபோல் நின்றுகொண்டிருந்தேன். மன்னிக்கவும் காலஇயந்திரத்தில் அமர்ந்து கொண்டிருந்தேன். தனிமை எப்போதும் நம்மை யோசிக்க வைக்கும். யோசிக்கத்தொடங்கினேன். கன்னியகுமரிக்குத்தானே வந்தோம். இங்கே அதற்கான எந்த அடையாளமும் தெரியவில்லையே?! திருவள்ளுவர் சிலை இல்லை. விவேகானந்தர் பாறை இல்லை. ஐயோ!! கடல் எங்கே? குமரி என்றாலே கடல்தானே?! கடலே இல்லாதபோது எங்கிருந்து விவேகானந்தரும், திருவள்ளுவரும்?! இந்தக் காலஇயந்திரம் கன்னியகுமாரிக்குப் பதிலாக வேறு ஊரில் கொண்டுவந்து இறக்கி விட்டுவிட்டதா? ஏன் ஊர்மாற்றி இறக்கிவிட்டாய் என்று சட்டையைப்பிடித்துக் கேட்பதற்கு நடத்துனர் யாரும் இந்த வாகனத்துக்கு இல்லையே?! என்ன செய்வது?! சிவப்பு பொத்தானை அழுத்தி மீண்டும் சென்னைக்கே சென்று விடலாமா? முதலில் கீழே இறங்குவோம். நம்மூரைப்போல லிஃப்ட் கொடுத்து உதவுவதற்கு யாரேனும் வருகிறார்களா என்று பார்க்கலாம். கீழே இறங்கினேன்.

இந்த இயந்திரம் அழகாக மடங்கி, பின் சுருங்கி, ஒரு சூட்கேஸைப்போல மாறும் அழகுக்கே இதைக்கண்டுபிடித்த கைக்கு ஒரு வைரமோதிரம் பரிசளிக்க வேண்டும். வேண்டாம். அவ்வளவு வசதியில்லை. தங்கமோதிரம் போதும். சூட்கேஸை கையில் எடுத்துக்கொண்டேன். கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும் இந்தச்சாலை சிறிய வளைவுநெளிவுகளுடன் சென்றுகொண்டிருக்கிறது. இப்படியே இந்தச் சாலையோரமாக நடந்தால் ஏதேனும் ஊர் வரலாம். நடக்கத்தொடங்கினேன். இங்கே நடப்பதில் எந்தக்கடினமும் இல்லை. வெயில் இல்லை. புழுதி இல்லை. இரைச்சல் இல்லை. செம்மண் சாலைதான் என்றாலும் மேடுபள்ளங்கள் எதுவும் இல்லை. தனியே நடக்கிறோம் என்கிற வருத்தத்தைத்தவிர வேறு எதுவுமே இல்லை. கூடநடப்பதற்கு யாரேனும் இருந்தால், எத்தனை மைல்கள் வேண்டுமானாலும் இந்தச்சாலையில் நடக்கலாம். அரைமணி நேரமாக நடக்கிறேன். இதுவரை ஒருமனிதரைக்கூட பார்க்க முடியவில்லை.

டொட்டகு..  டொட்டகு..  டொட்டகு..  டொட்டகு..

தூரத்திலிருந்து ஒரு குதிரை வந்துகொண்டிருக்கும் சத்தம். "நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா" பாடல் முழுக்க ஒலித்துக் கொண்டிருக்கும் அதே குதிரை ஓடும் சத்தம். பயத்தோடும், ஆச்சரியத்தோடும் மெதுவாகத் திரும்பிப்பார்த்தேன். மீண்டும் ஆச்சரியம். எம்.ஜி.ஆர் குதிரையில் வந்து கொண்டிருந்தார். 18000 வருடங்களுக்கு முன்னால் எப்படி எம்.ஜி.ஆர்?? ஆனால் குதிரையில் வருபவர் கொஞ்சம் கருப்பாக இருந்தது சந்தேகத்தை வரவழைத்தது. குதிரை இப்போது என்னை நெருங்கிவிட்டது. குதிரையில் யார் வந்தாலும் நமக்கு எம்.ஜி.ஆர் வருவதுபோலவேத் தோன்றுவது வேடிக்கை. இது யாரோ நம்பியார்போல் இருக்கிறது. முறைத்துக்கொண்டே  வருகிறான். உடம்போடு ஒட்டியிருக்கும் நீளமான சிவப்பு அங்கியை அணிந்திருக்கிறான். தையல்காரரிடம், உடை, உடம்போடு ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் கவர்ச்சியாக இருக்காது என்று சொல்லி தைத்திருப்பான் போல. அத்தனை இறுக்கமாக இருந்தது அந்த அங்கி. இளஞ்சிவப்பு நிறத்தில் கால்சட்டை. கொஞ்சம் சுகவாசிபோல் தெரிகிறது. கால்சட்டை காற்றுப்புகும் அளவிற்கு தளர்வாக இருந்தது. சல்வார் கமீஸ்போல,  கால் மாணிக்கட்டுக்கு கீழே மட்டும் இறுக்கமாக இருந்தது. தோலில் செய்த ஒரு கச்சை, இடுப்பை அலங்கரித்துக்கொண்டிருந்தது. இடுப்பின் இடதுபுறத்தில் ஒரு நீளமான வாளும், ஒரு குறுவாளும் தொங்கிக்கொண்டிருந்தன. பொன்னிறத்தில் வாள்களின் கைப்பிடிகள் மட்டும் வாள் உறைகளின் மேலே தெரிந்தது. வலதுபக்கம் அடிப்பாகம் நன்றாக வளைந்திருக்கும் சற்றுநீளமான  குறுவாள் ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது. அதன் கைப்பிடி எதுவும் மேலே தெரியவில்லை. பார்ப்பதற்கு நம்மூர் காவல்துறை அதிகாரிகளின் மூடியிருக்கும் துப்பாக்கி உறையைப்போல இருக்கிறது. இரண்டடி நீளமான தலைமுடியை, பெண்களின் ஒற்றை ஜடையைப்போல பின்னியிருந்தான். இரண்டுவார தாடி, மீசையை அழகாக செதுக்கி ஒதுக்கியிருந்தான். ஏதோவொரு சவரக்காரரின் கைவண்ணமாக இருக்கலாம்.  அதிகபட்சம் இவனுக்கு முப்பது வயதிருக்கலாம். இளநரை எதுவும் இல்லை. நல்ல தண்ணீர் கிடைக்கிறது போலிருக்கிறது.  பெரிய விழிகள். கூர்மையான பார்வை. சுருங்கச்சொல்ல வேண்டுமென்றால் நாம் இலக்கியங்களில் படித்த போர்வீரனின் தோற்றத்தில் இருந்தான்.       
நான் அவனைப் பார்ப்பதுபோலவே அவனும் என்னைப்பார்த்துக் கொண்டிருந்தான். என்னைவிட கூர்மையாக, ஒரு வேற்றுகிரகவாசியைப் பார்ப்பதுபோலப் பார்த்துக்கொண்டிருந்தான். பேசத்தொடங்கினான்.

"யாரப்பா நீ? உன் தோற்றமே நகைச்சுவையாக இருக்கிறதே? ஏன் உன் முகத்தின் நிறம் இப்படி வெளிறிப்போய் இருக்கிறது? கேசத்தை ஏன் வெட்டியிருக்கிறாய்?" 

ஒரேநேரத்தில் இத்தனை கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்தேன். அவன் கறுப்பாக இருந்துகொண்டு, என்னைப்பார்த்து ஏன் உன் முகம் வெளிறிப்போய் இருக்கிறது என்று கேட்கிறானே? அவனுக்கு என்ன பதில் சொல்வதென்ற குழப்பத்துக்கு நடுவிலும், அவன் பேசுகிற அழகான தமிழ் மகிழ்ச்சியைத் தருகிறது.

"ஏன் எதுவும் கதைக்காமல் இருக்கிறாய்? வாய்பேச இயலாதா? எங்கேயிருந்து வருகிறாய் நீ?"

" அதெல்லாம் நல்லாவே பேசுவேன் சார். சென்னைலேந்து வர்றேன் "

" என்ன உளறுகிறாய்? நீ பேசுகிற மொழியே புரியவில்லையே? வேற்று நாட்டிலிருந்து வந்திருக்கிறாய் என்பது மட்டும் புரிகிறது. எங்கள் நாட்டை வேவுபார்க்க வந்தாயா?" கோபமாக முறைத்தான்.

பழக்கதோஷத்தில் இங்கே பேசுவதுபோல் பேசிவிட்டேன். முடிந்தவரை நல்ல தமிழில் பேசிவிட வேண்டியதுதான். "வேவு பார்க்க வரவில்லை வீரனே! தூரதேசத்திலிருந்து வருகிறேன். நமது நாட்டைச்சுற்றிப்பார்க்கவே வந்தேன்." என் தமிழைக்கேட்ட, அவனது முகம் கொஞ்சம் மலர்ந்தது. நான் படித்த தமிழ்வழிக்கல்வியும், புத்தகங்களும் இப்போது கைகொடுத்திருக்கிறது.

முகம் மலர்ந்தாலும், அவன் சந்தேகம் தீரவில்லை என்பது மட்டும் அவனது கண்களில் தெளிவாகத் தெரிந்தது.

"உண்பதற்கு வழியில்லாத தேசத்திலிருந்தா வருகிறாய்? என் இப்படி மிதியடியில் கால்சட்டை தைத்து அணிந்திருக்கிறாய்?"   

ஜீன்ஸை இதைவிட கேவலமாக கலாய்க்க யாராலும் முடியாது. பதில் சொல்லாமல் அமைதியாக நின்றேன்.

"உன் தோற்றமும், ஆடையும், தலையோடு ஒட்டிய கேசமும் ஏதோ பட்டினி தேசத்திலிருந்து வந்திருக்கிறாய் என்பதைச்சொல்கிறது" அவனது கண்களில் கேலி தெரிந்தது.

என் கையில் இருக்கும் காலஇயந்திரத்தை உற்றுப்பார்த்தான். "உன் கையில் இருப்பது என்ன? எங்கள் நாட்டின் கைதிகளுக்கு உணவளிக்கும் தட்டின் நிறத்தில் இருக்கிறதே?

மீண்டும் கேலி பேசுகிறான்.

எனக்கு கோவம் வந்துவிட்டது. "யோவ்... சும்மா ஓவரா பேசாத.. சாப்பாட்டுக்கு வழியில்லாம ஒண்ணும் போயிடல. நீ உன் வேலையைப் பாத்துட்டுட்டு போயா யோவ்" அவனுக்கு பாஷை புரியாது என்கிற தைரியத்தில்தான் பேசினேன்.

என் மொழியைக்கேட்டு ஆச்சரியத்தில் கண்களைச்சுருக்கி மீண்டும் சகஜ நிலைக்கு வந்தான்.

"இதுதான் உன் பட்டினி தேசத்தின் மொழியா ? உன் ஆடையைப்போலவே உன் மொழியும் வறுமையாக இருக்கிறது"

சங்கம் வளர்த்த உலகத்தின் மூத்தமொழி, இந்த பதினெட்டாயிர வருடத்தில்  வளர்ந்து, பல வடிவங்களைக் கடந்து , பின் உருமாறி, இன்று  அவன் பார்வையில் தளர்ந்து நிற்கிறதுபோல. அதனால்தான்  உன் மொழி வறுமையாக இருக்கிறது என்கிறான்.

இம்முறை குற்றவுணர்ச்சியினால் அமைதியாக நின்றேன்.

"மூடனே. புரவியில் ஏறு"

அவன் மூடன் என்றதும் என் குற்றவுணர்ச்சி மறைந்து , கோபம் அதிகமாகி விட்டது. அரசியல் விஞ்ஞானிகள் இருக்கும் ஊரிலிருந்து வந்திருக்கும் என்னைப்பார்த்து மூடன் என்று சொன்னால் கோபம் வராதா என்ன? "யோவ்.. நீ இதே மாதிரி பேசிட்டு இருந்தேன்னு வச்சுக்கோயேன்..இந்த மெஷின்ல தூக்கிப்போட்டு எங்க ஊருக்கு கொண்டு போயிடுவேன் பாத்துக்க. அப்பதான் நான் மூடனா அல்லது நீ மூடனானு தெரியும்."

மொழி புரியவில்லை என்றாலும், நான் கோபமாக இருக்கிறேன் என்பது அவனுக்கு புரிந்துவிட்டது போல.  "மூடனை, மூடன் என்றுதான் அழைக்க முடியும். வாயை மூடிக்கொண்டு புரவியில் ஏறு. அரசவைக்குச் செல்லலாம். நீ நாட்டைச்சுற்றி பார்க்க வந்தாயா? அல்லது வேவு பார்க்க வந்தாயா என்று அங்கு தெரிந்துவிடும்."

ஆஹா!! மாட்டிக்கொண்டுவிட்டோம் என்பது புரிந்தது. சட்டென பயம் மேலிட, கால்கள் நடுங்கத்தொடங்கியது. அரசவை என்கிறான். அங்கே சென்றால் என்ன நடக்குமோ என்று யாருக்குத் தெரியும்? சந்தேகத்தில் நம்மைக் கொன்றுவிட்டால் என்ன செய்ய? அநியாயமாக  இப்படி 18000 வருடங்களுக்கு முன்பு வந்தா சாகவேண்டும்?  வேறுவழியில்லை. டைம் மெஷினில் ஏறி, சிவப்பு பட்டனை அழுத்தி ஊருக்குச் சென்றுவிட வேண்டியதுதான். ஆனால் இவன் அருகில் நின்றால் அதைச்செய்ய முடியாது. அடுத்தநொடியே , சாலையைவிட்டு இறங்கி மரங்கள் நிறைந்திருக்கும் மணற்பரப்பில் வேகமாக நடக்க ஆரம்பித்தேன்.

"மூடனே நில்" என்று கத்தினான். திரும்பாமல் நடையின் வேகத்தைக்கூட்டினேன்.

"நிற்கிறாயா அல்லது வளரியை வீசவா" அவனது குரல் இம்முறை  சற்று கோபமாகக் கேட்டது.

வளரி வேறு வைத்திருக்கிறானா? இனி ஓடினாலும் பயனில்லை. மெதுவாகத் திரும்பினேன். 'வா' என்பதுபோல் தலையை அசைத்தான். பயந்தபடியே அவனைநோக்கி நடந்தேன். என் பயத்தை ரசித்தபடியே என்னைப்பார்த்துக் கொண்டிருந்தான். அருகில் சென்றதும் சட்டென்று தன் இடதுகையால் என் சட்டையைப்பிடித்து, அலேக்காகத் தூக்கி குதிரையில், அவனுக்கு முன்பாக அமரவைத்தான். "நான் என்ன ஹீரோயினாடா? உன்கூட பாட்டு பாடிட்டே குதிரையில வர்றதுக்கு" என்று மனதில் நினைத்துக்கொண்டேன்.

அந்த பயத்திலும் ஆர்வமிகுதியால் "உன் வலதுபக்க இடுப்பில் தொங்குகின்ற உறையில் இருப்பதுதான் வளரியா?" என்றேன்..

சட்டெனப் பறந்தது குதிரை!!!

- வளரியோடு மீண்டும் வருகிறேன்.

முதல் அதிகாரம் - 1



இடம் : சென்னை மெரினா கடற்கரை. நேரம் : இரவு 10 மணி.
கடல் அலையை ஒட்டி கரை ஒதுக்கப்பட்டிருந்த சிறிய படகில் சாய்ந்தவாறு முழுக்க நனைந்தபடி அமர்ந்திருக்கிறேன். இரவு 10 மணிக்கு இங்கு ஏன் அமர்ந்திருக்கிறேன் என்று யோசிக்கிறீர்களா? என் கையில் இருக்கும் சூட்கேஸை பார்த்தபடி நானும் அதையேதான் யோசித்துக்கொண்டிருக்கிறேன் . சூட்கேஸ் என்றவுடன், துணிமணிகள் வைக்கும் சூட்கேஸ் என்று நினைத்துவிடாதீர்கள். ‘இன்று நேற்று நாளை’ படத்தில் ஹீரோ விஷ்ணுவுக்கு கிடைக்குமே? அந்த சூட்கேஸ்.

நான் கடைசியாகப் பார்த்த இங்கிலீஷ் படம் ‘ஷோலே’. ஆக, ஹாலிவுட் டைரக்டர் கிறிஸ்டோஃபர் நோலன் படத்தில் வரும் சூட்கேஸை நான் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை நீங்கள் பார்த்திருந்தால் இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும், எனது கையில் இருக்கும் வஸ்துவின் பெயர் டைம் மெஷின்(TIME MACHINE) என்று.

என்ன... நம்ப மாட்டீர்களா? சந்தேகப்படாதீர்கள்... நம்புங்கள். நம்பிக்கை.. அதானே எல்லாம் !!

மெரினா கடற்கரைக்கு, சென்னைக்கு வந்த புதிதில் வேலையின்மை காரணமாக அடிக்கடி வரும் பழக்கம் இருந்தது. அதற்குப் பின் கிடைத்த வேலைகளும், வேலைப்பளுவும் இப்போது அந்தப் பழக்கத்தை குறைத்துவிட்டிருக்கிறது. ஏனோ, இன்று அலுவலகம் முடிந்தவுடன் கடற்கரைக்குச் செல்ல வேண்டுமென்று மனம் சொன்னது. திடீரென மனதில் தோன்றும் எண்ணங்கள் சில நம் வாழ்க்கையையே புரட்டிப்போட்டுவிடும். இது அதுபோல் ஒரு எண்ணமாக இருக்கும் என்று அப்போது தெரியவில்லை. வேலையை முடித்துவிட்டு சரியாக எட்டு மணிக்கு இங்கு வந்து சேர்ந்தேன். வழக்கம்போல் கடல் அலையில் கால்களை நனைத்தபடி நடந்துகொண்டிருந்தேன். கடல் நீரும், மணலும் மோதிக்கொண்டிருந்த கால்களில், மண்ணில் பாதி புதைந்தபடி கிடந்த இந்த சூட்கேஸ் தட்டுப்பட, குனிந்து அதைக் கையில் எடுத்தால், கலர் கலராக பட்டன்களோடு மின்னிக்கொண்டிருந்தது. என்னவாக இருக்கும் என்று யோசித்தேன். யோசித்து என்ன செய்ய? என்னவாக இருந்தாலும் பார்த்துவிடுவோம் என்று, அப்பெட்டியை கையில் எடுத்துக்கொண்டு, அருகில் இருந்த படகில் சென்று அமர்ந்துகொண்டேன். பெட்டியில் இருந்த நீல நிற பட்டனின் கீழ் ‘ஆடியோ’ என்று எழுதியிருக்க இது ஏதோ புதிய சங்கதிபோல் இருக்கிறது என்று நினைத்தாவாறே ஆர்வத்துடன் அந்தப் பொத்தானை அழுத்தினேன்.

‘தமிழில் தகவலைத் தொடர அருகிலிருக்கும் வெள்ளை நிறப் பொத்தானை அழுத்தவும். ஆங்கிலத்தில் தகவலைத் தொடர...’

வாழ்க தமிழ்! தமிழ்ப்பற்று எழுச்சிகொள்ள, வெள்ளை நிறப் பொத்தானை அழுத்தினேன்.

கமல்ஹாசன் குரலைப்போல ஒரு கம்பீரமான குரல் பேசத்தொடங்கியது. வாய்ஸ் ஓவரில் ஆண் குரல் கேட்பதே கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தது.

‘இதுதான் டைம் மெஷின் என்கிற கால இயந்திரம். இதில் இருக்கும் பச்சை நிறப் பொத்தானை அழுத்தினால், இது நாற்காலியாக விரியும். பின் அதில் நீங்கள் ஏறி அமர்ந்துகொண்டு, அதிலிருக்கும் திரையில் நீங்கள் போக விரும்பும் இடம், தேதி மற்றும் நேரத்தைக் குறிப்பிட்டால், உங்களை அந்த இடத்துக்கே, நீங்கள் குறிப்பிட்ட தேதியில், நேரத்தில் கொண்டு நிறுத்தும். அங்கே சென்றபின், நீங்கள் நாற்காலியிலிருந்து இறங்கினால், மெஷின் சுருங்கி, சூட்கேஸாக மாறிவிடும். நீங்கள் விரும்பினால் அங்கேயே தங்கி, அந்தச் சூழலில், அங்கு வாழும் மனிதர்களுடன் வாழலாம். மீண்டும் பழைய இடத்துக்கே வர விரும்பினால், பச்சை நிறப் பொத்தானை அழுத்தி, நாற்காலியில் அமர்ந்து, அங்கே இருக்கும் சிவப்பு நிறப்பொத்தானை அழுத்தினால், அடுத்த ஐந்து நொடிகளில் மீண்டும் பழைய இடத்துக்கே வந்துவிடுவீர்கள். நன்றி. தகவலை மீண்டும் கேட்க, வெள்ளை நிறப் பொத்தானை மீண்டும் அழுத்தவும்.’

திரும்பவும் அழுத்தி மீண்டுமொருமுறை தகவலைக் கேட்டு முடித்தேன். கையில் கிடைத்திருக்கும் கால இயந்திரத்தில் ஏறி கடந்த காலங்களில் நாம் பயணம் செய்யலாம் என்பது இப்போது தெளிவாகப் புரிந்தது. நம்பி இதில் பயணம் செய்யலாமா என சில நிமிடங்கள் யோசித்தேன்.

இயல்பாகவே எனக்கிருக்கும் அகழ்வாராய்ச்சி குணமும், பழங்கால வாழ்க்கை மீதான மோகமும், சில பல வருடங்கள் முன்னால் சென்று அன்றைய நாட்கள் எப்படி இருந்தது எனப் பார்த்துவிட்டு வரலாம் என்று என்னைத் தூண்டியது. விதியா, மதியா என்று தெரியவில்லை என்னைப் பச்சை நிறப் பொத்தானை அழுத்த வைத்தது. பொத்தானை அழுத்தியவுடன் மெஷின் மெதுவாக விரிந்து நாற்காலியாக மாறும் அழகை பார்த்துக்கொண்டே நின்றேன். நல்லவேளையாக இருளில் அங்கு நடப்பதை யாரும் கவனிக்கவில்லை. மெதுவாக நாற்காலியின் மேல் ஏறி அமர்ந்துகொண்டேன். நெஞ்சம் கொஞ்சம் வேகமாக துடிப்பதை உணர முடிந்தது.

‘ஆண்டவன் மேல பாரத்தை போட்டுட்டு குதிச்சுடுறா கைப்புள்ளை’ என்று மனதில் சொல்லிக்கொண்டே மெஷினின் திரையில் மெரினா கடற்கரை என்றும், தேதியில் கி.பி. 1637 ஜனவரி 1 என்றும் தோராயமாக டைப் செய்தேன். அடுத்த ஐந்தாவது நொடி, நடுக்கடலில் நாற்காலியோடு மூழ்கிக் கொண்டிருந்தேன்.

அதிர்ச்சியும், ஆச்சர்யமும் மேலிட, என்ன செய்யலாம் என்று ஒரு மைக்ரோ நொடி மட்டுமே யோசித்து, நாற்காலியிலிருந்து கடலில் குதித்தேன். அந்த சூழ்நிலையிலும் நாற்காலி, அழகாகச் சுருங்கி சூட்கேஸாக மாறுவதை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. சூட்கேஸாக மாறியபடியே மூழ்கிக்கொண்டிருந்த மெஷினை முழுவதுமாய் மாறியதும் பிடித்துக்கொண்டேன்.

நீச்சல் கற்றுத்தந்த தாத்தாவுக்கு நன்றி சொல்ல இப்போது நேரமில்லை. இருளில் கரை தெரியவில்லை. ஒரு கையில் மெஷினுடன் மிதந்துகொண்டிருந்தேன். சுற்றிலும் இருள். மருந்துக்கும் வெளிச்சம் இல்லை. பெரிதாக பயம் இல்லை.ஆனால், மாட்டிக்கொண்டோம் என்பது மட்டும் புரிந்தது. திடீரென அங்கே கேட்ட பெரும் சத்தம் திடுக்கிட வைத்தது. இந்நேரத்தில் இங்கென்ன சத்தம் என எண்ணியபடி உற்றுப்பார்த்த என் கண்களில், நான்கைந்து பெரிய பாய்மரக்கப்பல்கள் மிதந்து கொண்டிருந்தது தெரிந்தது. தற்போதெல்லாம் இதுபோன்ற படகுகள் இல்லை. உறுதி செய்துகொண்டேன்... கி.பி. 1637-க்கே வந்துவிட்டோம்.

உண்மையிலேயே நம் கையில் இருப்பது கால இயந்திரம்தான். எவ்வளவு நேரம் இப்படியே நீந்துவது? கரை எங்கிருக்கிறது என்று தெரிந்தால் கரையை நோக்கியாவது நீந்தலாம். யாருக்கு என்ன நல்லது செய்தேனோ தெரியவில்லை, ஒரு கனமான பெரிய பலகை மிதந்து வந்து கொண்டிருந்தது. அனுப்பியது கடவுளா? வாய்ப்பில்லை. காரணம் இது அனுப்பியதில்லை. கி.பி. 1637-ல் ஏற்கனவே மிதந்துகொண்டிருக்கும் பலகைக்கு அருகில் நான் வந்து மிதந்துகொண்டிருக்கிறேன் என்பதுதான் உண்மை. இப்போது இந்த ஆராய்ச்சியும் தேவையில்லை என்று முடிவுசெய்து, ஒரு கையால் நீந்தி பலகை மேல் ஏறி அமர்ந்துகொண்ட பின்புதான் மூச்சு சமநிலைக்கு வர ஆரம்பித்தது. மெஷினைப் பார்த்தேன். அது என்னைப் பார்த்து வாயைப்பொத்திக்கொண்டு சிரிப்பதுபோல் தோன்றியது. கடலில் மூழ்கியும் அதில் இருக்கும் பட்டன்கள் மின்னிக்கொண்டுதான் இருந்தன. வாட்டர் ப்ரூஃப் மெஷின்போல.

இப்போது மீண்டும் அதே பெரும் சத்தம். பயம் அதிகமானது. இம்முறை கப்பல்களை கவனமாகப் பார்த்தேன். கப்பல்கள் மிதந்து கொண்டிருக்கவில்லை. போர்புரிந்து கொண்டிருந்தன. கி.பி. 1637-ல் அல்லவா இருக்கிறோம்? அன்றைய சூழலில் பழவேற்காட்டில் வியாபாரம் செய்துகொண்டிருந்த டச்சுக்காரர்களும், மயிலாப்பூரில் வணிகத்தலம் அமைத்திருந்த போர்த்துகீசியர்களும், வணிகத்துக்காக வங்கக்கடலையே போர்க்களமாக்கிக் கொண்டிருக்கும் காட்சிதான் அது என்பது புரிந்தது. வரலாறு தெரிந்தவர்களுக்கு இது இன்னும் தெளிவாகப் புரியும்.

போர்புரிந்து கொண்டிருந்த நான்கு கப்பல்களில் ஒன்று திடீரென நான் நின்ற திசை நோக்கித் திரும்ப, அந்த இருளில் என்னைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்று புரிந்தாலும், ஒரு நொடிகூட தாமதிக்காமல் பச்சை நிறப் பொத்தானை அழுத்தினேன். இம்முறை அது விரியும் அழகைப் பார்க்க மனமில்லை. நாற்காலியாக மாறிய மெஷினில் குதித்து அமர்ந்தேன். அடுத்த நொடியே சிவப்பு நிறப் பொத்தானை அழுத்தினேன். அடுத்த ஐந்தாவது நொடியிலிருந்து, நீண்ட நேரமாக, கொஞ்சம் ஈரமாக இங்கேயே அமர்ந்திருக்கிறேன்.

அதெப்படி? மெரினா கடற்கரை என்றுதானே டைப் செய்தேன். ஏன் கடலுக்குள் சென்றேன்? அப்படியானால் இப்போது கடற்கரையாக இருக்கும் பகுதி, அப்போது கடலாக நிரம்பியிருந்ததா? வருடங்கள் அதிகமாக, அதிகமாக கடல் ஊருக்குள் வருமே ஒழிய, உள்வாங்க வாய்ப்பில்லையே..? ஒருவேளை மெரினா கடற்கரைக்குப் பதிலாக, மெரினா கடல் என்று டைப்செய்து விட்டேனோ?

அது எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். நான் எப்படியோ தப்பித்துவிட்டேன் அதுவே போதும். இப்போது என்ன செய்யலாம்? இந்த வஸ்துவைத் தூக்கி கடலில் வீசிவிட்டு வீட்டுக்குப் போய் விடலாமா?

ஊரில் சொந்தமாக வியாபாரம் துவங்கிய மாமா ஒருவர், அவரது மேஜையில் இருந்த, பொத்தானை அழுத்தியவுடன் திறந்து மூடும் ஒரு வகை கால்குலேட்டரை என்னிடம் காண்பித்து சிலாகித்தது நினைவிருக்கிறது. ஊருக்குச் சென்று இந்த கால இயந்திரத்தை அவரிடம் காண்பிக்க வேண்டும். அதற்கு முன் இதில் ஏறி வேறு எங்காவது செல்லலாமா? நீச்சல் தெரிந்ததால் கடந்த முறை தப்பிவிட்டோம். மீண்டுமொருமுறை இதில் ஏறி வேறு எங்காவது சென்று மாட்டிவிட்டால் என்ன செய்வது?

ம்... பொறுங்கள்... என்னைக் கொஞ்ச நேரம் யோசிக்கவிடுங்கள்...

ஓ.கே... நிச்சயமாக டைம் மெஷினில் ஏறுகிறோம், எங்காவது செல்கிறோம்.

சென்னை மட்டும் வேண்டாம். ரிஸ்க் அதிகம். கன்னியாகுமரிக்குப் போவோம். அங்கு நம் பூட்டன், பூட்டி யாராவது நம்ம ஜாடையில் இருக்கிறார்களா என்று பார்ப்போம். சரி, எத்தனை வருடங்களுக்கு முன் போகலாம்? 300, 400 வருடங்களுக்கு முன் போனால்தான் வெள்ளைக்காரன் பிரச்னை. அதற்கு முன், நம் தமிழ்நாட்டை சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்ட வரலாற்றைக் கேட்டிருக்கிறோம். அதற்கும் முன்?படித்ததும் இல்லை. கேள்விப்பட்டதும் இல்லை. அங்கே சென்று பார்க்கலாம். அப்படியே நம் தமிழ்ப் பண்பாட்டையும், நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையையும் அறிந்து வரலாம். இன்று மொத்தமாக மாறிப்போயிருக்கிற நம் பண்பாட்டின் துவக்க காலங்கள் எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கும்போதே அத்தனை சுவாரசியமாக இருக்கிறது. ஆக, போகலாம் என்று முடிவு செய்தாயிற்று. போறதுதான் போகிறோம்... ஒரு 18000 வருடங்களுக்கு முன் போவோம். ஏரியா நன்றாக இருந்தால் அங்கேயே செட்டில் ஆகிவிட வேண்டியதுதான். இங்கு அடிக்கிற வெயிலையும் தாங்கமுடியவில்லை, பெய்யுற மழையையும் தாங்க முடியவில்லை.

மீண்டுமொருமுறை கால இயந்திரத்தின் பச்சை நிறப்பொத்தானை அழுத்தினேன்.. மனம் தெளிவாக இருக்கிறது. முதல் முறையாக நிதானத்தோடு கால இயந்திரத்தைப் பார்க்கிறேன். விரிந்த நாற்காலியில் ஏறி அமர்வது, சிம்மாசனத்தில் ஏறி அமர்வது போன்ற உணர்வைத் தருகிறது. நாட்டின் சிம்மாசனத்தைத்தான் தாரைவார்த்து விடுகிறோமே... இப்படிக் கிடைத்தால்தான் நமக்கு.

18000 வருடங்களுக்கு முன் என்றால், கி.மு. 16000 என்று டைப் செய்வோம். நாள்...அதே ஜனவரி–1. சென்ற முறை நேரத்தை டைப் செய்யாமல்விட்டிருக்கிறேன். அதனால்தான் இங்கிருந்த அதே நேரத்துக்கு அங்கு சென்று, இருளில் நடுக்கடலில் மாட்டிக்கொண்டேன். ஆக, நேரம் காலை 10 மணி. இடம், கன்னியாகுமரி.

1... 2... 3... 4... 5...

காத்திருங்கள். 18000 வருடங்களுக்கு முந்தைய கன்னியாகுமரியில் சந்திப்போம்...!

- மெஷின் பறக்கும்

ஏன் மழை பெய்வதில்லை

சென்னையில் ஏன் மழை பெய்வதில்லை என்பதற்கான காரணம் இன்றுதான் புரிந்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பெய்கிற மழையை, மழையென்று கூறுவது முறையாகாது. ஆதலால் "சென்னையில் மழை பெய்யவில்லையா" என்று நீங்கள் அதிர்ச்சியடையத் தேவையில்லை. நடுவில் ஓர் இடைவெளி விட்டிருந்தாலும் மொத்தமாக சென்னையில் ஒன்பது வருடங்களாக வாழ்கிறேன். இதுவரை ஒருமுறைகூட மழையில் சந்தோஷமாக நனைகிற, மழையில் விளையாடுகிற, மழையில் நடனமாடுகிற குழந்தைகளை நான் பார்த்ததில்லை.

நான் சிறு குழந்தையாக இருந்தபோது,  கருங்கல்லும், சிமெண்டும் கலந்து போடப்படும் தெருச்சாலைகள் எங்கள் ஊரில் அறிமுகமாகவில்லை. எங்கள் வீடுகள் இருக்கும் தெருவில் அப்போது செம்மண் சாலைதான். மழை நாட்களில், வீட்டின் முன்பாக செந்நிறத்தில் ஓடும் மழைநீர் சிலபல வீடுகளைக்கடந்து AVM கால்வாயில் சென்று கலக்கும். AVM என்றால் AV மெய்யப்பச்செட்டியார் என்று நினைத்துவிடாதீர்கள். "அனந்த விக்டோரிய மார்த்தாண்டவர்மர்" என்பது அதன் விரிவாக்கம். மன்னர் காலத்தில் வெட்டப்பட்ட நதி. அந்த நதியையும், அதையொட்டித் தோன்றிய நாகரிகத்தையும் இன்னொருநாள் பேசலாம். இப்போது விஷயத்துக்கு வருகிறேன். அதுபோன்ற மழைநாட்களில் சித்தப்பாவோ, மாமாவோ செய்து தருகிற காகிதக்கப்பலை, பாட்டியின் மடியில் அமர்ந்துகொண்டோ, தாத்தாவின் பிடியில் நின்றுகொண்டோ ஒரு மாலுமியின் பெருமிதத்தோடு அம்மழைநீரில் விடுவது இன்னும் என் நினைவில் ஈரமாக  இருக்கிறது. அழகாக அசைந்துசெல்லும் வெள்ளைநிறத்துக் கப்பல், சிறிதுதூரம் சென்றதும் நீரின் வேகத்தில் கவிழ்ந்துவிடும். வருந்தவேண்டியதில்லை. குழந்தைகளுக்கு கப்பல் செய்வதற்காகவே வீடுகளில் காகிதங்களை சேகரித்து வைத்திருப்பார்கள் போல! மழைநின்று, ஓடுகிற வெள்ளமும் நிற்கும்வரை கப்பல்கள் செய்யப்பட்டுக்கொண்டே இருக்கும். எல்லா வீட்டுத்திண்ணைகளும் இதைப்போலவே காகிதக்கப்பல்களால் நிறைந்திருப்பது அழகிய மழைக்கவிதை. அந்த சித்தப்பாக்களும், மாமன்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். நமக்கு அந்த ஆசீர்வாதங்கள் இல்லை. நம் வீட்டுக்குழந்தைகள் அலைபேசியுடன் அளவளாவிக் கொண்டிருக்கின்றனர்.

கொஞ்சம் வளர்ந்தபிறகு, மழைபெய்யும் நாட்களில், மழையில் மட்டுமே குளிப்பது எங்களின் வழக்கம். மாடி வீடுகளின் மொட்டைமாடியில் தேங்கும் நீரை பூமிக்கு அனுப்பும் குழாய்களின் கீழே நின்று குளிப்பது வரம். வானிலிருந்து பூமிக்கு வந்த மன்னாவுக்கு எந்த வகையிலும் இந்த மழைநீர் குறைந்ததல்ல. தெருவில் எந்த மாடிவீட்டுக்குழாய் பூமிக்கு அதிகநீரைக் கொண்டுவரும் என்பது தெரிந்து, அதன்கீழ் நின்று குளிப்பதற்கு வாண்டுகளாகிய நாங்கள் போடும் சண்டைகளின் முன்பு, கார்ட்டூன் தொலைக்காட்சிகள் பிச்சையெடுக்க வேண்டும். பள்ளிக்கூடம் விட்டு வீடுவரும்போது பெய்கிற அந்திமழையில் முழுதாய் நனைந்தபடி வீட்டுக்கு வரும் பழக்கம் இன்றும் தொடர்கிறது. மழை பெய்கிறதென்பதற்காக அலுவலகத்தைவிட்டு கிளம்பாமல் இதுவரை இருந்ததில்லை. "காய்ச்சல் வந்தா என்ன செய்றது" என்று மூன்று தசாப்தங்களாக என் அம்மா சொல்லிக்கொண்டே இருக்கிறார். ஒருமுறைகூட மழையில் நனைந்து காய்ச்சல் எனக்கு வந்ததில்லை.  என்னையும், மழையைக்கண்டு ஓடும்போது நனைந்தவர்களையும் தரம்பிரிக்க மழைக்குத்தெரியும். காய்ச்சலை அவர்களுக்குக் கொடுத்துவிட்டு மகிழ்ச்சியை மட்டும் எனக்குத்தருகிறது.

சென்னையில் நண்பர்களுடன் தங்கியிருந்த மழைநாட்களில் எங்கள்வீட்டு மொட்டைமாடி திருவிழாவாக மாறும். மாடியில் நம் இடுப்பளவு நிற்கும் தூண்களில் ஏறிநின்றுகொண்டு "தகிடததிமி, தகிடததிமி, தந்தானா" என்று பாடிக்கொண்டே பரதநாட்டியம் ஆடுவோம். பக்கத்துவீட்டு ஆளில்லா மொட்டைமாடிகளை நனைக்கும் மழைத்துளிகளைப் பார்ப்பதற்கு பாவமாக இருக்கும். சாளரங்கள் வழியாக எங்களின் கூத்துகளைப் பார்க்கும் குழந்தைகள் அதனினும் பாவம். மழை, காலங்காலமாக குழந்தைகளைத் தீண்டவே பூமிக்கு வருகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?!! ஆம். காரணம், உங்களைப்போல் அசிங்கமாக மழை பெய்தவுடன் கைகளைக்கொண்டு தங்கள் தலையை அவர்கள் மறைப்பதில்லை. பதிலாக, அண்ணாந்து பார்த்து மழைத்துளிகளை தங்கள் முகங்களில் ஏந்திக்கொள்கின்றனர். மழையின் குரலுக்கான செவிகள் அவர்களிடம் மட்டுமே இருக்கின்றன. மழையின் மொழி அவர்களுக்கு மட்டுமே புரியும். ஏன் குழந்தைகளை பூட்டி வைக்கிறீர்கள்? அவர்களை மழையில் நனையவிடுங்கள். குழந்தைகளைப் பூட்டிவைத்துவிட்டு, இப்போதெல்லாம் மழை சரிவர பொழியவில்லையென வருந்தி பயனில்லை. "குழந்தைகள் நனையாத ஊருக்கு மழை வராமல்போகும் சாத்தியங்களும் உண்டாம்!" நான் சொல்லவில்லை. இப்போதுதான் படித்தேன். வண்ணதாசன் சொல்கிறார்!!

ஏன் சென்னையில் மழை பெய்வதில்லை என்று என்னைப்போல், இப்போது உங்களுக்கும் புரிந்திருக்கலாம்!! இனிமேலாவது இயன்றவரை உங்கள் குழந்தைகளை மழையில் நனைய அனுமதியுங்கள். இறுதிக்காலங்களில் தங்கள் பேரக்குழந்தைகளை மடியிலமர்த்திச் சொல்வதற்கு கதையற்றவர்களாக உங்கள் குழந்தைகளை மாற்றிவிடாதீர்கள். மழைக்கதைகள் எப்போதும் கேட்கப்படும். இப்போது நான் சொன்ன கதையை நீங்கள் படித்துமுடித்திருப்பதே அதற்கான சாட்சி!!

-விஷன்.வி